தமிழர் இசைக்கலை குறித்துத் தொகுத்தெழுதுக.
நெடுவினாக்கள்
தொன்மைத் தமிழகம்
Answers
விடை:
மொழிக்கு முன் பிறந்த இசை :
உலகில், மொழி நிலை பெறுவதற்கு முன் இசை பிறந்துவிட்டதென்பர். மனிதன், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று.
இலக்கியத்தில் இசை :
பண்டைக்காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பண்கள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள், இசைப்பாடல்கள் என இசைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன. தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். நரம்பின் மறை என்று தொல்காப்பியர் உரைப்பதன் மூலம் இசை இலக்கணநூல் உண்டென உணரமுடிகிறது. மேலும், பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை நாடகக் கலைஞர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது.
தாலாட்டு முதல் ஒப்பாரி வரை :
தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது. தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப் பாடுவது. ஒப்பாரி என்பது ‘இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர்’ என்று இறந்தவரைப்பற்றிப் பாடுவது.
இசையின் தொன்மையும் சிறப்பும்:
இன்றைய கர்நாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே. பண்ணொடு தமிழொப்பாய் என்று தொடங்கும் தேவாரம், பண்ணும் தமிழும் பிரிக்க முடியாதவை என்று கூறும். தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்; தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர். குழலினிது யாழினிது என்று இசை பொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது.
இதன்மூலம் தமிழிசை தொன்மையும் சிறப்பும் பெற்றிருந்ததை அறியலாம்.